பயறு வகைகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம்: அமைச்சர் தகவல்!
"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தின்" கீழ் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம் என மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கில் தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026-27) வழங்கப்பட உள்ளது.
இத்திட்டம் செயல்படும் தகுதியுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி? கடைசி நாள் என்ன?
மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் / தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் / தனிநபர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்து பயன்பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
தகுதியுள்ள பயனாளிகள் மாவட்ட வேளாண்மை துணை (வேளாண் வணிகம்) அவர்களை 12.06.2026-க்குள் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதில் உள்ள அரசு மானியங்கள் மற்றும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
WhatsApp சேனலில் சேரவும்