கண்டமனூர் மூல வைகை ஆற்றங்கரையில் 400 ஆண்டுகள் பழமையான கருப்பசாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் மூல வைகை ஆற்றங்கரையில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டி 18 வகை அபிஷேக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், வைகை நதியின் பிறப்பிடமாகவும் வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்கக்கூடிய மூல வைகை ஆறு முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றியம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆற்றில் மீண்டும் நீர் பெருகி நாடு செழிக்க வேண்டும் என்ற நோக்கில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் அருகே மூல வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான ராமச்சந்திராபுரம் ஸ்ரீ கருப்பசாமி கோவிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் ஒன்று கூடி மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
18 வகையான சிறப்பு அபிஷேகங்கள்
இச்சிறப்பு வழிபாட்டின் போது, கருப்பசாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இவ்வழிபாட்டில் கண்டமனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விரைவில் மழை பொழிந்து, வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் மனமுருகி மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

